search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூரிய ஒளி"

    • உலகம் முழுவதும் அண்மைக்காலங்களில் வீகன் டயட் முறை மிகவும் பிரபலமாகி வருகிறது
    • இந்த வீகன் உணவு முறையால் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் கிடைக்காமல் போகலாம் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்

    உலகம் முழுவதும் அண்மைக்காலங்களில் வீகன் டயட் முறை மிகவும் பிரபலமாகி வருகிறது. வீகன் டயட் முறையை பின்பற்றுபவர்கள் இறைச்சி உணவுகள் மட்டுமில்லாமல், கால்நடைகளின் மூலம் கிடைக்கும் பால், தயிர், முட்டை போன்ற உணவுப் பொருட்களையும் உட்கொள்ள மாட்டார்கள்.

    முழுக்க முழுக்க காய்கறி, பழங்களை மட்டுமே மையப்படுத்திய இந்த உணவு முறையால் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் கிடைக்காமல் போகலாம் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனாலும் உலகம் முழுவதும் பலர் இந்த உணவு முறையை பின்பற்றுகின்றனர்.

    இந்நிலையில் ரஷ்ய நாட்டில் வீகன் டயட் முறையை பின்பற்றுவதாக கூறி, உணவு, தண்ணீர், தாய்ப்பால் என எதுவும் கொடுக்காததால் பிறந்த குழந்தை ஒன்று 1 வயது நிறைவடைவதற்குள் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

    வீகன் டயட் முறையை தீவிரமாக பின்பற்றும் 44 வயதான மாக்சிம் லியுட்டி, ஒரு வயதுக்கும் குறைவான மற்றும் 1.5 கிலோ எடையுள்ள தனது குழந்தைக்கு சூரிய ஒளியில் இருந்து ஊட்டச்சத்து கிடைக்கும் என்று பட்டினி போட்டுள்ளார்.

    குழந்தையின் தாயான ஒக்ஸானா மிரோனோவா (34) தனது குழந்தைக்கு தாய்ப்பால் கூட கொடுக்க கூடாது என மாக்சிம் லியுட்டி தடுத்துள்ளார்.

    மேலும் தனது குழந்தையை வைத்து பரிசோதனை செய்த அவர், குழந்தைக்கு சூரிய ஒளியால் கிடைக்கும் நன்மைகள் குறித்து மற்றவர்களுக்கு எடுத்து கூறியுள்ளார்.

    உணவு, தண்ணீர், தாய்ப்பால் கொடுக்கப்படாததால் உடல் மெலிந்த குழந்தை நிமோனியா நோயால் உயிரிழந்துள்ளது என்று மருத்துவ அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தனது மகனை பட்டினி போட்டு கொலை செய்த குற்றத்தில் மாக்சிம் லியுட்டிக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    இதே போல் கடந்தாண்டு தீவிர வீகன் டயட் உரையை பின்பற்றிய 39 வயது பெண்மணி ஸன்னா சம்சனோவா பரிதாபமாக மரணமடைந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    ரஷ்யாவை சேர்ந்த அவர், உணவு தண்ணீர் எடுக்காமல் தீவிரமாக வீகன் டயர் முறையை பின்பற்றினார். இதனால் நாளுக்கு நாள் உடல் மெலிந்து வந்த அவர் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் உயிரிழந்தார்.

    கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வீகனாக இருந்து வரும் இவர் பலருக்கும் வீகன் டயட் முறையை பின்பற்றுவது குறித்து இன்ஸ்டாவில் ரீல்ஸ் போன்றவற்றை தயார் செய்து பலருக்கும் முன்னுதாரணமாகவும் இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • குறைந்தது 20 நிமிடங்களாவது சூரிய ஒளியில் இருக்க வேண்டும்.
    • உங்கள் உடலுக்கும், மனதுக்கும் நல்லது.

    விடியற்காலையில் எழுந்து வெளியே சென்று இயற்கையான சூழ்நிலையில் சிறிது நேரத்தை செலவிடுவது பெண்களுக்கு சிரமமான காரியம்தான். இருந்தாலும் காலைநேர சூரிய ஒளி உடலில் படுமாறு குறைந்தது 20 நிமிடங்களாவது இருக்க வேண்டும். இது உங்கள் உடலுக்கும், மனதுக்கும் நல்லது. காலைநேர சூரிய ஒளி உங்கள் வாழ்க்கையில் பல்வேறு நேர்மறையான மாற்றங்களை உண்டாக்கும்.

    காலைநேர சூரிய ஒளி உடலில் படுவதன் மூலம் 'வைட்டமின் டி' சத்து இயற்கையான முறையில் உடலுக்கு கிடைக்கும். இதன் உதவியால் உடல் தேவையான அளவு கால்சியம் சத்தைப் பெற்று எலும்புகளை வலுவாக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

    'வைட்டமின் டி, இதய நோய்கள், ரத்த அழுத்தம் மற்றும் நுரையீரல் சார்த்த நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும். சூரிய ஒளி உடலில் படும்போது மனநிலையை நிதானமாகவும், அமைதியாகவும் மாற்ற உதவி செய்யும் `செரோடோனின்' ஹார்மோன் போதுமான அளவு சுரக்கும். காலைநேர சூரிய ஒளி உடலில் படுமாறு தினமும் 30 நிமிடங்கள் வேகமான நடைப்பயிற்சி செய்வதன் மூலம், உடல் எடை வெகுவாக குறையும்.

    `காலைநேர சூரிய ஒளி உடலில் படுமாறு இருப்பவர்களுக்கு தூக்கத்துக்கு காரணமான 'மெலடோனின்' ஹார்மோன் சீராக சுரக்கும். இதன் மூலம் இரவு நேரத்தில் ஆழ்ந்த, நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியும்.

    காலையில் இயற்கையான சூரிய ஒளியில் நேரம் செலவிடுபவர்களுக்கு 'சர்க்கேடியன் ரிதம்' எனப்படும் உயிர் கடிகாரம் சீராக செயல்படும். அதாவது உள் உறுப்புகள் அனைத்தும் சரியான நேரத்தில் தங்களுடைய வேலைகளை சீராக செய்யும்.

    இயற்கையான சூரிய ஒளி, மனநிலையை நேர்மறையாக மாற்றும் சக்தி கொண்டது. இதன்மூலம் மகிழ்ச்சிக்கு காரணமான 'எண்டோர்பின்' ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கும். இது, நாள் முழுவதும் உங்களை உற்சாகத்தோடு இயங்கச் செய்யும்.

    தினமும் காலையில் வெளியே சென்று சூரிய ஒளியில் நிற்க முடியாதவர்கள் வாரத்தில் 3 நாட்களாவது இருக்க முயற்சி செய்யுங்கள். இதற்காக குறிப்பிட்ட நாட்களையும், நேரத்தையும் ஒதுக்கி அதை தவறாமல் பின்பற்றுங்கள்.

    இதற்காக முந்தைய நாளின் இரவிலேயே தேவையான திட்டமிடுதல்களை செய்து விடுங்கள். கடிகாரத்தில் அலாரம் வைப்பது. அடுத்த நாள அதிகாலையில் வெளியே செல்லும்போது அணிய வேண்டிய உடைகளை எடுத்துவைப்பது ஆகிய வேலைகளை இரவே செய்து முடித்துவிடுங்கள்.

    வெளியே செல்ல முடியாதவர்கள், வீட்டிலேயே சூரிய ஒளி நேரடியாக படும் இடத்தில் உட்கார்ந்து தியானம் செய்பலாம் போகா பயிற்சிகளை மேற்கொள்ளலாம். காலைநேரத்தில் எழுந்து தோட்ட வேலைகளில் ஈடுபடலாம்.

    காலை நேர சூரிய ஒளியில் நேரத்தை செலவிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இயற்கையுடன் இணைந்திருக்கும் அந்த தருணங்கள், உங்கள் மனநிலை, ஆற்றல் நிலைகள் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வில் ஆழமான, நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

    • சுற்றுலா பயணிகள் செல்போனில் படம் பிடித்தனர்
    • சுற்றுலா பயணிகள் தங்கள் செல்போன்களில் புகைப்படம் எடுத்துசென்றனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் பாரத மாதா கோவில் மற்றும் ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம் அமைந்துள்ளது. இந்த கண்காட்சி கூடத்தின் முகப்பு வாயிலில் 27 அடி உயர ஆஞ்சநேயர் சிலை எழுப்பப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் ராமாயண வரலாற்றை சித்தரிக்கும் சித்திரங்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

    மேலும் மேல் தளத்தில் பாரத மாதா வெண்கல சிலையுடன் கூடிய கோவில் ஒன்றும் அமைந்துள்ளது. இந்த ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம் தினமும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக திறந்து வைக்கப்படுகிறது. இந்த ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடத்தை தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை இந்த ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம் சூரிய ஒளியின் பிரதிபலிப்பினால் தங்க நிறத்தில் தகதகவென்று வித்தியாசமாக ஜொலித்தது. இந்த காட்சியை இன்று காலை ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் செல்போன்களில் புகைப்படம் எடுத்துசென்றனர்.

    • சூரியன் சிவலிங்கத்தை தரிசனம் செய்வதாக ஐதீகம்.
    • சங்கரலிங்கம் சன்னதியில் வீற்றிருக்கும் சூரிய பகவானுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் சங்கரலிங்கம், சங்கரநாராயணர், கோமதி அம்மன் ஆகிய 3 சன்னதிகள் அமைந்துள்ளன.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடந்து வருகின்றன. இங்கு மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 21, 22, 23 ஆகிய தேதிகளிலும் சூரியன் உதித்தவுடன் சூரிய ஒளி பக்தர்கள் சென்று தரிசனம் செய்யும் வாசல்கள் வழியாக நீள வாக்கில் சென்று, சிவலிங்கத்தின் வலப்புறமாக விழத்தொடங்கி சிறிது சிறிதாக நகர்ந்து சிவலிங்க திருமேனி முழுவதும் பரவும்.

    இந்த ஒளியானது சில சமயம் 4 நாட்கள் கூட விழும். இது போன்ற கோவில்கள் தமிழ்நாட்டில் சில உள்ளன. இது சூரியன் சிவலிங்கத்தை தரிசனம் செய்வதாக ஐதீகம். அதன்படி இந்த ஆண்டு 1-ம் நாளான இன்று சூரிய ஒளி சிவபெருமான் மீது விழும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து கோவிலில் உள்ள மின்விளக்குகள் அணைக்கப்பட்டு சூரியன் சிவலிங்கத்தை வழிபடும் காட்சி தென்பட்டது. இதனை திரளான பக்தர்கள் கண்டு வழிபட்டனர். அப்போது சங்கரலிங்கத்திற்கும், சங்கரலிங்கம் சன்னதியில் வீற்றிருக்கும் சூரிய பகவானுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

    • அடையாளமாக சூரிய ஒளி ஆண்டிற்கு இரண்டு முறை மூலவர் லிங்கத் திருமேனியில் விழுகிறது.
    • ஊர்வசியின் நடனத்தை ரசித்துக் கொண்டிருந்த இந்திரன், குருவை அலட்சியம் செய்தான்.

    காவிரியின் கிளை நதிகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில் உள்ள திட்டில் இவ்வாலயம் இருப்பதால் திட்டை என்றும் தென்குடித்திட்டை என்றும் வழங்கப்படுகிறது. புராண காலத்தில் பிரளயம் ஏற்பட்ட போது பூலோகமே நீரில் அமிழ்ந்திருந்த போது திட்டை என்னும் இவ்விடம் மட்டும் நீரில் மூழ்காமல் இருந்தது. இவ்விடத்தில் சிவபெருமான் சுயம்புவாக ஒரு லிங்க உருவில் எழுந்தருளினார். இக்கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மூலவர் வசிஷ்டேஸ்வரர் ஐந்தாவது லிங்கமாக சுயம்பு லிங்கமாக அருள் புரிகிறார். இவ்வாறு ஐந்து லிங்கங்கள் இருப்பதால் இத்தலத்தை பஞ்சலிங்க ஷேத்திரம் என்று கூறுவர். இந்த ஒரு தலத்தை வழிபட்டால் சிதம்பரம், காளஹஸ்தி, திருவண்ணாமலை, திருஆனைக்கா மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பஞ்சபூத தலங்களுக்கு சென்று வந்த புண்ணியம் கிட்டிவிடும். சம்பந்தர் சிவபெருமானை விட அவர் சுயம்பு லிங்கமாக காட்சி தரும் இத்தலம் மேலானது என்று குறிப்பிடுகிறார்.

    சூரியன் இங்கு இறைவனை வழிபட்டிருக்கிறான். இதன் அடையாளமாக சூரிய ஒளி ஆண்டிற்கு இரண்டு முறை மூலவர் லிங்கத் திருமேனியில் விழுகிறது. தட்சினாயண புண்ய காலத்தில் ஆவணி மாதம் 15, 16, 17 தேதிகளிலும், உத்தராயண புண்ய காலத்தில் பங்குனி மாதம் 25, 26, 27 தேதிகளிலும் சூரிய கிரணங்கள் மூலவர் மீது விழுகின்றன.

    மூலவர் வசிஷ்டேஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கியது.

    மூலத்திருமேனி சுயம்பு. சதுர ஆவுடையார் மீது உள்ள சிவலிங்கத் திருமேனி சிறியதாக உள்ளது. திருமேனியின் மீது வரி வரியாகக் கோடுகள் சுற்றிலும் உள்ளன. நான்கு பட்டையாக உள்ளது. முன்னால் செப்பினாலான நந்தி பலிபீடம் உள்ளன. மூலவர் கருவறையின் மேல் விதானத்தில் ஒரு சந்திர காந்தக் கல் பொருத்தப்பட்டிருக்கிறது. காற்றில் உள்ள ஈரப்பசையை உறிஞ்சி சுமார் 24 நிமிடங்களுக்கு (ஒரு நாழிகை) ஒருமுறை மூலவர் சிவலிங்கத் திருமேனியில் ஒரு சொட்டு நீர் விழும்படி இக்கல் பொருத்தப்பட்டிருப்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். பிரம்மா, விஷ்ணு, சுப்பிரமணியர், பைரவர், சூரியன், யமதர்மன், சனீஸ்வரன், தேவேந்திரன், ஆதிசேஷன், வசிஷ்டர், ஜமதக்னி முனிவர் ஆகியோர் இத்தலத்தில் வசிஷ்டேஸ்வரரை வழிபட்டுள்ளனர். கோஷ்டமூர்த்தங்களாக நர்த்தன விநாயகரும், தட்சிணாமூர்த்தியும், இலிங்கோத்பவரும், பிரம்மாவும், துர்க்கையும் உள்ளனர். சண்டேஸ்வரர் சந்நிதியும் உள்ளது.

    குரு ஸ்தலம்:

    ஆங்கிரசர் முனிவரின் ஏழாவது குழந்தை வியாழன். சகல கலைகளிலும் சிறந்து விளங்கிய இவர் தேவர்களுக்கு குருவானார். குருவின் வழிகாட்டலில் தேவர்கள் நிம்மதியாக வாழ்ந்தனர். ஒருநாள் குரு இந்திரனை பார்க்கச் சென்றார். ஊர்வசியின் நடனத்தை ரசித்துக் கொண்டிருந்த இந்திரன், குருவை அலட்சியம் செய்தான். குருவுக்கு ஆத்திரம் வந்தது. அங்கிருந்து புறப்பட்ட அவர் ஒரு மறைவிடத்தில் வாழத் தொடங்கினார். சரியான வழிகாட்டல் இல்லாததால் தேவலோகமே ஸ்தம்பித்தது. அரக்கர்கள் தேவர்களை கொடுமைப்படுத்தினார்கள். தவறை உணர்ந்த இந்திரன், எங்கெங்கெல்லாம் சிவத்தலங்கள் இருந்தனவோ அங்கெல்லாம் சென்று குருவை தேடினான். அப்படித் தேடிவரும் வழியில்தான் திட்டைக்கு வந்தான். வசிஷ்டேஸ்வரர் கோயிலில் மனமுருக மன்னிப்பு கேட்டு வேண்டிக்கொண்டான். இனியும் அவனை சோதிக்க விரும்பாத குரு, அவனுக்கு காட்சி தந்தார். இந்த சிவாலயத்திலேயே தனி சந்நதியும் கொண்டார்.

    தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர்

    கோவில் அமைப்பு:

    ஆலயத்தின் முன்புறம் பசு தீர்த்தம் அமைந்துள்ளது. இவ்வாலயத்திற்கு ஒரு கிழக்கு நோக்கிய 3 நிலை இராஜகோபுரம் உள்ளது. கோபுர வாயில் வழியாக சில படிகள் ஏறி உள்ளே சென்றால் முதல் பிரகாரத்தை அடையலாம். உள்ளே நுழைந்தவுடன் காணப்படும் முன்மண்டபத்தில் ஒரு தூணில் வலப்பால் நால்வர் வடிவங்களும் மறுபுறத் தூணில் ரிஷபாரூடர் வடிவமும் செதுக்கப்பட்டுள்ளது. கொடிமரம் கருங்கல்லால் ஆனது. உயரத்தில் பலிபீடம் நந்தி உள்ளது. மூலவர் சந்நிதிக்கும் அம்பாள் சந்நிதிக்கும் இடைப்பட்ட நிலையில், அம்பாள் சந்நிதிக்கு மேற்குப் பக்கத்தில் தனி விமானத்துடன் கூடிய தெற்கு நோக்கிய குரு பகவானின் தனி சந்நிதி அமைந்துள்ளது.

    எல்லா சிவாலயங்களிலும் ஞான வடிவான தட்சிணாமூர்த்தியாக குரு கோயில் கொண்டிருப்பார். ஆனால் தென்குடித் திட்டையில் இவர் ராஜ குருவாக நின்ற நிலையில் அபய ஹஸ்த முத்திரையுடன் பக்தர்களுக்கு அருள் புரிகிறார். அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. சந்நிதிக்கு முன்னால் செப்பாலான நந்தி பலிபீடம் உள்ளன. அம்மன் சந்நிதிக்கு முனபாக மேல் கூரையில் 12 ராசிகளுக்கும் ராசி சக்கரம் சிற்ப வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அவரவர் ராசிக்குக் கீழே நின்று பிரார்த்தனை செய்தால் வேண்டியது கிட்டும் என்பது ஆன்றோர் நம்பிக்கை.

    சம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய இப்பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

    முன்னைநான் மறையவை முறைமுறை குறையடுந்

    தன்னதாள் தொழுதெழ நின்றவன் தன்னிடம்

    மன்னுமா காவிரி வந்தடி வருடநற்

    செந்நெலார் வளவயல் தென்குடித் திட்டையே.

    மகரமா டுங்கொடி மன்மத வேள்தனை

    நிகரலா காநெருப் பெழவிழித் தானிடம்

    பகரபா ணித்தலம் பன்மக ரத்தோடுஞ்

    சிகரமா ளிகைதொகுந் தென்குடித் திட்டையே.

    கருவினா லன்றியே கருவெலா மாயவன்

    உருவினா லன்றியே உருவுசெய் தானிடம்

    பருவநாள் விழவொடும் பாடலோ டாடலுந்

    திருவினான் மிகுபுகழ்த் தென்குடித் திட்டையே.

    உண்ணிலா வாவியா யோங்குதன் தன்மையை

    விண்ணிலார் அறிகிலா வேதவே தாந்தனூர்

    எண்ணிலார் எழில்மணிக் கனகமா ளிகையிளந்

    தெண்ணிலா விரிதருந் தென்குடித் திட்டையே.

    வருந்திவா னோர்கள்வந் தடையமா நஞ்சுதான்

    அருந்திஆர் அமுதவர்க் கருள்செய்தான் அமருமூர்

    செருந்திபூ மாதவிப் பந்தர்வண் செண்பகந்

    திருந்துநீள் வளர்பொழில் தென்குடித் திட்டையே.

    ஊறினார் ஓசையுள் ஒன்றினார் ஒன்றிமால்

    கூறினார் அமர்தருங் குமரவேள் தாதையூர்

    ஆறினார் பொய்யகத் தையுணர் வெய்திமெய்

    தேறினார் வழிபடுந் தென்குடித் திட்டையே.

    கானலைக் கும்மவன் கண்ணிடந் தப்பநீள்

    வானலைக் குந்தவத் தேவுவைத் தானிடந்

    தானலைத் தெள்ளமூர் தாமரைத் தண்டுறை

    தேனலைக் கும்வயல் தென்குடித் திட்டையே.

    மாலொடும் பொருதிறல் வாளரக் கன்நெரிந்

    தோலிடும் படிவிர லொன்றுவைத் தானிடங்

    காலொடுங் கனகமூக் குடன்வரக் கயல்வரால்

    சேலொடும் பாய்வயல் தென்குடித் திட்டையே.

    நாரணன் தன்னொடு நான்முகன் தானுமாய்க்

    காரணன் அடிமுடி காணவொண் ணானிடம்

    ஆரணங் கொண்டுபூ சுரர்கள்வந் தடிதொழச்

    சீரணங் கும்புகழ்த் தென்குடித் திட்டையே.

    குண்டிகைக் கையுடைக் குண்டரும் புத்தரும்

    பண்டுரைத் தேயிடும் பற்றுவிட் டீர்தொழும்

    வண்டிரைக் கும்பொழில் தண்டலைக் கொண்டலார்

    தெண்டிரைத் தண்புனல் தென்குடித் திட்டையே.

    தேனலார் சோலைசூழ் தென்குடித் திட்டையைக்

    கானலார் கடிபொழில் சூழ்தருங் காழியுள்

    ஞானமார் ஞானசம் பந்தன செந்தமிழ்

    பானலார் மொழிவலார்க் கில்லையாம் பாவமே.

    தேன் துளிக்கும் மலர்களையுடைய சோலைகள் சூழ்ந்த திருத்தென்குடித்திட்டையைப் போற்றி ஞானசம்பந்தன் அருளிய இச் செந்தமிழ்ப்பாக்களைப் பாடவல்லவர்கட்குப் பாவம் இல்லை என்று சம்பந்தர் பாடியுள்ளார்.

    • இந்த நிகழ்வானது சுமார் 10 நிமிடம் வரை நீடித்தது.
    • இந்த அரிய காட்சியை காண ஏராளமான பக்தர்கள் காலை முதலே கோவிலுக்கு வந்தனர்.

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆறு பாயும் காவிரி கரை ஓரத்தில் உள்ளது காரைக்குறிச்சி கிராமம். இந்த கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்காலத்தில் கட்டப்பட்ட பழமையான ஸ்ரீசௌந்தரநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவிலில் ஒவ் வொரு ஆண்டும் ஆகஸ்ட் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 20-ந்தேதியில் இருந்து 25-ந்தேதி வரை சிவலிங்கத்தின் மேல் சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வு நடைபெறும்.

    இதனால் சூரிய பகவான் சிவனை இந்த தலத்தில் வழிபட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஆகஸ்டு மற்றும் ஏப்ரல் மாதத்தில் சூரிய பகவான் வலம் வந்து ஈசனை வழிபடுவதாக ஐதீகம்.

    அதன்படி இன்று காலை 6.10 மணியில் இருந்து 6.20 மணி வரைக்கும் சூரிய உதயமானது. அப்போது சூரியனிலிருந்து வெளிப்படும் பிரதிபலிக்கப்பட்ட ஒளிக்கதிரானது நேரிடையாக லிங்கத்தின் மீது பட்டு பொன்னொளியில் ஒளிர்ந்தது. இந்த நிகழ்வானது சுமார் 10 நிமிடம் வரை நீடித்தது.

    இந்த அரிய காட்சியை காண ஏராளமான பக்தர்கள் காலை முதலே கோவிலுக்கு வந்தனர். சூரிய பகவான் சிவனை வழிபடுவதை பக்தர்கள் கண்டுகளித்து வழிபட்டு பரவசம் அடைந்தனர். இந்த அரிய நிகழ்வானது இன்னும் ஓரிரு நாட்கள் மட்டுமே நிகழலாம் என பக்தர்கள் தெரிவித்தனர்.

    • லிங்கத்திற்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
    • சாமிக்கு தீபாராதனை நடைபெற்றது.

    திருவண்ணாமலையில் கிரிவல பாதை திருநேர் அண்ணாமலையார் கோவிலில் உள்ள லிங்கத்தின் மீது ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப்புத்தாண்டு தினமான சித்திரை மாதம் 1-ந் தேதியன்று காலையில் சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு நடைபெறும். அதன்படி நேற்று காலை லிங்கத்தின்மீது சூரியஒளி விழும் அதிசய நிகழ்வு நடைபெற்றது. அதனை காண அதிகாலையில் கோவிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். முன்னதாக லிங்கத்திற்கு பால், தயிர், தேன் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

    சூரிய ஒளி லிங்கத்தின் மீது விழுந்ததும் அங்கிருந்த பக்தர்கள் 'அரோகரா' கோஷம் எழுப்பி பரவசம் அடைந்தனர். பின்னர் சாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • இந்த கோவில் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
    • 14-ந்தேதி வரை சிவன்பெருமான் திருமேனி மீது சூரிய ஒளிக்கதிர்கள் படும் நிகழ்வு நடைபெறும்.

    காட்பாடி தாலுகா வள்ளிமலையை அடுத்த விண்ணம்பள்ளி கிராமத்தில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அகஸ்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சூரியன் வழிப்பட்ட திருத்தலமாக இந்த கோவில் கருதப்படுகிறது.

    ஆண்டு தோறும் இந்த கோவிலில் பங்குனி மாதம் 23-ந் தேதி முதல் 7 நாட்கள் சிவன்பெருமான் திருமேனி மீது சூரிய ஒளிக்கதிர்கள் படும் நிகழ்வு நடைபெறும். இந்த நிகழ்வை காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்து வழிபடுகின்றனர்.

    சிவபெருமானை சூரியன் தரிசிப்பதால் இதை காணும் பக்தர்களுக்கு ஏழுபிறவிகளில் செய்த வினைகள் தீரும் என்பது ஐதீகமாக உள்ளது.

    அதன்படி இந்தாண்டு பங்குனி மாதம் 23-ந் தேதி முதல் சூரிய பகவானின் ஒளிக்கதிர்கள் சிவன் மீது படும் நிகழ்வு காலை 6 மணி முதல் 6.30 வரை நடைபெற்றது. திரளான பக்தர்கள் இந்த நிகழ்வின்போது தரிசனம் செய்தனர். சித்திரை முதல்நாள் வரை இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

    • இந்த அதிசய நிகழ்வை இன்றும், நாளையும் பார்க்கலாம்.
    • ஏராளமான பக்தர்கள் வந்து கண்டு தரிசனம் செய்தனர்.

    சிற்ப கலையில் சிறந்து விளங்கும் தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் மேற்குநோக்கிய சிவாலயம் ஆகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் 21, 22, 23 ஆகிய தேதிகளில் மாலை வேளையில் சூரிய ஒளி லிங்கத்சூதின் மீது படுவது வழக்கம்.

    சூரியன் மறையும் நேரத்தில் ஒளியானது கோவிலுக்கு வெளியே உள்ள தெவச கம்பத்தின் மீது பட்டு ராஜ கோபுரம் வழியாக உள்ளே நந்தி மண்டபத்தில் உள்ள நந்தியின் கொம்பு வழியாக மூலஸ்தானத்தில் உள்ள சிவ லிங்கைத்தின் மீது விழும்.

    இந்த அதிசய நிகழ்வானது நேற்று நடைபெற்றது. வான சாஸ்திரம் எவ்வித அறிவியல் தொழில் நுட்பங்களோ, நவீன உபகரணங்களோ இல்லாத அந்த காலங்களில் வான சாஸ்திரத்தை துல்லியமாக ஆராய்ந்து வருடத்தில் மாசி மாதம் 3 நாட்கள் மட்டும் சூரிய ஒளி லிங்கத்தின் மீது விழும் வகையில் இந்த கோவிலை கட்டியிருப்பது தமிழர்களின் கட்டிட கலைக்கு சிறந்த சான்றாக உள்ளது.

    இந்த கோவிலில் சிவலிங்கத்தின் மீது விழும் சூரிய ஒளியானது முதலில் கோவிலின் முன்புறமுள்ள நந்தி மண்டபத்தின் உள் நுழைந்து. கோவில் பிரகாரங்களை கடந்து நந்தியின் கொம்புகள் வழியாக ஊடுறுவி சென்று சிவலிங்கத்தின் மீது விழுகிறது.

    இந்த நிகழ்வின்போது தரிசனம் செய்தால் 7 பிறவிகளில் செய்த வினைகள் தீரும் என கூறப்படுகிறது. இதனால் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த சூரிய ஒளி விழும் நிகழ்ச்சியினை காண வருகை தருகின்றனர். 2-வது நாளான இன்றும், நாளையும் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

    முதல் நாளில் லிங்கத்தின் வலது பகுதியில் விழுந்த சூரிய ஒளி, 2-ம் நாளான இன்று இடது பகுதியிலும், 3-ம் நாளில் லிங்கத்தின் மைய பகுதியிலும் விழுகிறது. இந்த அதிசய நிகழ்வை தாரமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து கண்டு தரிசனம் செய்தனர்.

    இதனால் ஏராளமான பக்தர்கள் தாரமங்கலம் சிவன் கோவிலை நோக்கி சென்றவண்ணம் உள்ளனர்.

    • மார்கழி மாதம் முழுவதும் சூரிய ஒளிக்கதிர்கள் நேரடியாக மூலவர் மீது விழுகிறது.
    • இந்த நிகழ்வு சுமார் 10 நிமிடங்கள் தொடர்ந்தது.

    தமிழகத்தில் உள்ள பழமையான சிவன் கோவில்களில் ஒன்றாக நெல்லை மாவட்டம் உவரியில் உள்ள சுயம்புலிங்க சுவாமி கோவில் உள்ளது.

    இங்கு சுவாமி சுயம்புவாக தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையும், பெருமையும் கொண்ட இக்கோவில் வங்க கடலோரம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது.

    இக்கோவிவில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் முழுவதும் சூரிய ஒளிக்கதிர்கள் நேரடியாக மூலவர் சுயம்புலிங்க சுவாமி மீது விழுந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று மார்கழி மாத பிறப்பையொட்டி அதிகாலையிலேயே கோவிலில் நடை திறக்கப்பட்டு தனுர் மாத திருப்பள்ளி எழுச்சி பூஜை தொடங்கியது.

    அதைத்தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகம், உதய மார்த்தாண்ட பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.

    அப்போது காலை 6.40 மணியளவில் சூரிய ஒளி கதிர்கள் கோவிலின் முதன்மை வாயில் வழியாக மூலவர் சுயம்புலிங்கசுவாமி மீது விழும் அபூர்வ நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்வு சுமார் 10 நிமிடங்கள் தொடர்ந்தது. இந்த காட்சியை காண ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன், 'சிவாய நம' கோஷங்கள் எழுப்பியவாறு சுவாமியை வணங்கினர்.

    ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் சூரிய பகவானே நேரில் வந்து உவரி சுயம்புலிங்கத்தை வணங்குவதாக இங்கு வரும் பக்தர்கள் கருதுகின்றனர். மேலும் பல்வேறு கோவில்களில் சூரிய ஒளி சுவாமி மீது விழும் நிகழ்வு குறிப்பிட்ட நாட்களில் நடைபெறும்.

    ஆனால் உவரியில் உள்ள சுயம்புலிங்க சுவாமி கோவிலில் மட்டும் தான் ஒரு மாதம் முழுவதும் மூலவர் மீது சூரிய ஒளிக்ததிர்கள் படரும் நிகழ்வு நடைபெறுகிறது என்பது இக்கோவிலின் சிறப்பு ஆகும்.

    • அஸ்தி கலசம் 1948-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்12-ந் தேதி கன்னியாகுமரி எடுத்துவரப்பட்டு முக்கடல் சங்கமத்தில் கரைக்கப்பட்டது.
    • காந்திஅஸ்தி கட்டத்தின் (நினைவிடம்) மீது ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தியான அக்டோபர் மாதம் 2-ந்தேதிஅன்று பகல் 12 மணிக்கு அபூர்வ சூரிய ஒளி விழும்

    கன்னியாகுமரி :

    1948-ம் ஆண்டு ஜனவரி மாதம்30-ந்தேதி டெல்லியில் பிரார்த்தனைக் கூட்டத்துக்கு சென்றபோது கோட்சே என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது.

    பின்னர் அவரது அஸ்தி பல கலசங்களில் சேகரிக்கப்பட்டது. அதில் ஒரு அஸ்தி கலசம் 1948-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்12-ந் தேதி கன்னியாகுமரி எடுத்துவரப்பட்டு முக்கடல் சங்கமத்தில் கரைக்கப்பட்டது. முன்னதாக அவரது அஸ்தி பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கன்னியாகுமரி கடற்கரை யில் வைக்கப்பட்டது. அவரது அஸ்தி வைக்கப்பட்ட அதே இடத்தில் அதை நினைவு கூறும் வகையில் காந்தி நினைவு மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது.

    இந்த நினைவு மண்டபத் துக்கு 1954-ம் ஆண்டு ஜூன் மாதம் 20-ந்தேதி ஆச்சாரியாகிருபளானியால் அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் இந்த மண்டபம் 1956-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30-ந்தேதி அப்போதைய கேரள கவர்னர் பி.எஸ்.ராவ் என்பவரால் திறந்து வைக்கப்பட்டது. மகாத்மா காந்தி மரணம் அடையும் போது அவரது வயது 79. அவரது வயதை குறிக்கும் வகையில் இந்த மண்டபம்79அடி உயரத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நினைவு மண்ட பத்தில் உள்ள காந்திஅஸ்தி கட்டத்தின் (நினைவிடம்) மீது ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தியான அக்டோபர் மாதம் 2-ந்தேதிஅன்று பகல் 12 மணிக்கு அபூர்வ சூரிய ஒளி விழும். காந்தி நினைவு மண்டபத்தில் சூரிய ஒளி விழும் இந்த அபூர்வ நிகழ்வைக் காண அன்றைய தினம் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள்.

    அதேபோல இந்த ஆண்டு காந்தி ஜெயந்தி யானவருகிற அக்டோபர் மாதம் 2-ந்தேதி பகல் 12 மணிக்குகன்னியாகுமரி காந்திநினைவு மண்டபத்தில் உள்ள காந்தி அஸ்தி கட் டத்தின் மீது இந்த அபூர்வ சூரிய ஒளி விழுவதை பார்க்கலாம். தமிழக அரசின் சார்பில் மகாத்மா காந்தி 182- வது பிறந்தநாள் விழா வருகிற அக்டோபர் மாதம் 2-ந்தேதி காலை 11 மணிக்கு கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் நடக்கிறது.

    விழாவில் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரகிரண் பிரசாத், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்கிறார் கள்.

    • இந்த கோவிலில் கடந்த ஜூலை மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது.
    • செப்டம்பர் 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை சூரியக்கதிர்கள் ஆதிகேசவப் பெருமாளின் திருமேனியில் விழும்.

    திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் கடந்த ஜூலை மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்த கோவிலில் செப்டம்பர் மாதம் 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை மாலையில் சூரியக்கதிர்கள் கருவறை வரை பாய்ந்து ஆதிகேசவப் பெருமாளின் திருமேனியில் விழும் அதிசயம் நடைபெறும். பெருமாளுக்கு உகந்த தமிழ் மாதமான புரட்டாசி மாத தொடக்கத்தில் மாலைச்சூரியனின் பொன்னிற கதிர்கள் பெருமாளின் திருமேனியில் விழும் வகையில் கோவிலை வடிவமைத்துள்ளனர்.

    இந்தநிலையில், நேற்று மாலையில் சூரியனின் மஞ்சள் நிறக்கதிர்கள் கண்களை கூசச்செய்யும் விதத்தில் பாய்ந்து கருவறையில் பெருமாள் மீது விழுந்தது. இதைப் பார்த்து பக்தர்கள் பரவசமடைந்தனர். இந்த அபூர்வ காட்சியை இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணியளவில் காணலாம்.

    ×